காரைக்குடி: சங்கராபுரம் ஊராட்சி தலைவர் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், துணைத்தலைவர் தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது உறுப்பினர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே சாக்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட சங்கராபுரம் ஊராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்றதாக முதலில் தேவி, இரண்டாவதாக பிரியதர்சினி என இரண்டு பேருக்கு சான்று வழங்கப்பட்டது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் இந்த ஊராட்சி மன்றத்துக்கான துணைத்தலைவர் தேர்தல் வரும் 4ம் தேதி நடத்தப்பட உள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். துணைத்தலைவர் பதவிக்கு தலைவர் வாக்களிக்க வேண்டும். தலைவர் இல்லாமலே எப்படி துணைத்தலைவர் தேர்தல் நடத்த முடியும் என உறுப்பினர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.