பெரம்பூர்: வியாசர்பாடி காந்திபுரம் திடீர் நகரை சேர்ந்தவர் வள்ளியம்மாள் (70). கணவர் இறந்து விட்டதால், தனது மகள் சாந்தி வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த 21ம் தேதி, சாந்தி வீட்டில் இருந்த அனைவரும் வேலைக்கு சென்றுள்ளனர். வள்ளியம்மாள் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். மாலையில் அனைவரும் வீடு திரும்பியபோது, வள்ளியம்மாள் சுயநினைவின்றி கீழே விழுந்து கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனிடையே, வீட்டில் சோதனை செய்தபோது, பீரோவில் இருந்த 7 சவரன் தங்க நகை மற்றும் ₹5 லட்சம் மாயமானது தெரிந்தது. இதையடுத்து, வள்ளியம்மாளின் பேரன் சுரேஷ், வியாசர்பாடிகாவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், எங்களது பாட்டி மர்மமான முறையில் இறந்துள்ளார். வீட்டில் இருந்த நகை, பணமும் மாயமாகி உள்ளது. எனவே, அவர் இறப்பில் சந்தேகம் உள்ளது, என தெரிவித்து இருந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, குடும்பத்தினரிடம் விசாரித்தனர்.அப்போது, வள்ளியம்மாளின் பேத்தி மஞ்சு என்பவரின் கணவர் கார்த்திக் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். ஆட்டோ டிரைவரான இவர், சமீபத்தில் ₹70 ஆயிரம் மதிப்புள்ள புதிய பைக் வாங்கியது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவரை பிடித்து தீவிரமாக விசாரித்தபோது, வள்ளியம்மாளை ெகான்று, நகை, பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டார்.