டெல்லியில் நடைபெற்ற CAA-க்கு எதிரான போராட்டத்தில் வன்முறை: உயிரிழந்தோர் எண்ணிக்கை 3-ஆக உயர்வு...பெரும் பதற்றத்தில் மத்திய அரசு

புதுடெல்லி: தேசிய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஷாகீன்பாக் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேல் பெண்கள் ஒன்று திரண்டு போராட்டத்தை  நடத்தி வருகின்றனர். அவர்கள் பொது மக்களுக்கு இடையூறாக சாலையை  மறித்துள்ளதால்,  மாற்று இடத்திற்கு சென்று போராட்டத்தை தொடர உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதற்காக போராட்டக்காரர்களுடன் பேச சமரசக்குழு ஒன்றையும் அமைத்து உத்தரவிட்டனர். ஆனால், இந்தகுழுவினர் நடத்திய  பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் போராட்டம் அங்கு தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், ஷாகீன்பாக்கை தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களுக்கு திடீரென போராட்டம் பரவ தொடங்கியுள்ளது. வடகிழக்கு டெல்லியின் சீலாம்பூர், மவுஜ்பூர்  பகுதிகளை யமுனா விகாருடன் இணைக்கும் சாலையில் 1000க்கும் அதிகமான  பெண்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட ஆண்கள் சனிக்கிழமை இரவு திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், போராட்டம் நடத்தி வரும் இடம் அருகே உள்ள மவுஜ்பூர் பகுதியில் சிஏஏ சட்டத்தை எதிர்ப்பவர்களுக்கும்,  அதனை ஆதரிப்பவர்களுக்கும் இடையே திடீர் மோதல் வெடித்தது. இருதரப்பிலும் ஒருவர் மீது மற்றொருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். இதனால் அந்த இடம் போர்களம் போனறு காட்சியளித்தது.

இதையடுத்து அங்கு போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி கலவரம் ஏற்படுத்தியவர்களை துரத்தி அடித்தனர். இதற்கிடையே, இன்று டெல்லி யமுனா விஹார் பகுதியில் நடைபெற்ற குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில்  வன்முறை வெடித்தது. துப்பாக்கிச்சூடு நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளையும் வீசியும் போலீசார் கூட்டத்தை கலைத்தனர். இந்த கலவரத்தில் தலைமை காவலர் ரத்தன் உயிரிழந்தார். இதனையடுத்து, வடக்கு மற்றும் தெற்கு டெல்லியில்  144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தொடர்ந்து பேட்டியளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி, வடகிழக்கு டெல்லியில் வன்முறை சம்பவங்களுக்குப் பின்னர் கஜூரி காஸ் பகுதியில் பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கை  நிலைநிறுத்த டெல்லியில் கூடுதல் படைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இன்று ஜஃப்ராபாத்தில் நடந்த வன்முறை போராட்டத்தின் போது காயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் குரு தேக் பகதூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  என்றும் தெரிவித்தார். இந்நிலையில், கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தங்கியுள்ள நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள வன்முறை மத்திய அரசுக்கு பெரும் தலைவலியை  ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: