டெல்லியில் மீண்டும் வன்முறை வெடித்தது: CAA-க்கு எதிரான போராட்டத்தில் கல்வீச்சு தாக்குதல்...கண்ணீர் புகை குண்டு வீசி கட்டுப்படுத்த போலீசார் முயற்சி

டெல்லி: அண்மையில் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது.  தொடர்ந்து, நாடாளுமன்ற இருஅவையிலும் நிறைவேற்றப்பட்டு குடியுரசுத் தலைவர் ஒப்புதலுடன் சட்டமாக  கொண்டுவரப்பட்டது. இதற்கிடையே, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், அதை திரும்பப் பெற வலியுறுத்தியும் நாடு  முழுவதும் எதிர்க்கட்சியினர் மற்றும் இஸ்லாமிய அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால்,  குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.

இந்நிலையில், டெல்லி மஜூபூர் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிராகவும், ஆதரவாகவும் சில அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, CAA-வுக்கு எதிர்த்து போராட்டம் நடத்தியவர்களுக்கும் ஆதரித்து போராடியவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து, மர்மநபர்கள் மாஜ்பூரில் ஒரு சில கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து, போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் மாஜ்பூர் பகுதி பெரும் கலவரமாக மாறியது. இதனையடுத்து, கலவரத்தை கட்டுப்படுத்த போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கட்டுப்படுத்த முயற்சி செய்து வருகின்றனர். மோதல் காரணமாக மாஜ்பூர்-பாபர்பூர் இடையே மெட்ரோ ரயில் நிலையத்தின் கதவுகள் மூடப்பட்டன. அமெரிக்க அதிபர் டிரம்ப் நாளை இந்தியா வரவுள்ள நிலையில் டெல்லியில் வன்முறை வெடித்துள்ளது மத்திய அரசுக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: