டெல்லி : OBC கிரீமிலேயேர் உச்சவரம்பை ரூ. 8 லட்சத்தில் இருந்து உயர்த்த திமுக எம்.பி வில்சன் மாநிலங்களவையில் வலியுறுத்தி உள்ளார். சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலையில் மேம்பட்டு இருக்கும், ஓ.பி.சி. வகுப்பினர், ‘கிரீமிலேயர்’ என்று வகைப்படுத்தப்படுகின்றனர். அவர்கள், கல்வி, அரசு வேலைவாய்ப்புகளில் சில இடஒதுக்கீடுகளை பெற முடியாது. இவர்களுக்கான வருமான உச்சவரம்பை, ரூ. 8 லட்சத்தில் இருந்து உயர்த்த திமுக எம்.பி வில்சன் மாநிலங்களவையில் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “2017க்கு பிறகு பிற்படுத்தப்பட்டோருக்கான கிரீமிலேயேர் உச்ச வரம்பை ஒன்றிய அரசு உயர்த்தவே இல்லை. ரூ.8 லட்சமாக கிரீமிலேயேர் உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்ட போது தங்கம் கிராம் ரூ.3,000 ஆக இருந்தது.
இன்று தங்கம் ஒரு கிராம் ரூ.12,000; ஆனால், OBC கிரீமிலேயேர் உச்சவரம்பு அதே ரூ.8 லட்சமாக உள்ளது. 3 முறை கிரீமிலேயர் உச்சவரம்பை திருத்தி அமைக்காமல் ஒன்றிய பாஜக அரசு தவறவிட்டுள்ளது. OBC ஆணையம் பரிந்துரைத்தும் இன்றுவரை ஒன்றிய அரசு கிரீமிலேயர் உச்சவரம்பை உயர்த்தவில்லை. பாஜக அரசு கிரீமிலேயர் உச்சவரம்பை உயர்த்தாததால் நாடு முழுக்க OBC மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். மத்திய பல்கலை.களில் உள்ள 2537 பேராசிரியர் பணியிடங்களில் வெறும் 423 பேர் மட்டுமே OBC பிரிவினர். 16.67 சதவீதம் ஓபிசி பிரிவினர் மட்டுமே மத்திய பல்கலை.களில் பேராசிரியர்களாக உள்ளனர்.
அரசியலமைப்புச் சட்டம் உறுதி அளித்த 27 சதவீத OBC இட ஒதுக்கீடு என்ன ஆயிற்று?. ஆர்டிஐ-யில் பெறப்பட்ட தகவலின்படி நாட்டில் உள்ள 21 ஐஐடி, 13 ஐஐஎம்களில் வெறும் 11.2% மட்டுமே OBC பிரிவினர். ஆர்டிஐ தகவலின்படி 13 ஐஐடிகளில் வெறும் 9.6% ஆசிரியர்கள் மட்டுமே OBC பிரிவினர். குறைந்தது 2 ஐஐடி, 3 ஐஐஎம்களில் 90 சதவீதம் ஆசிரியர்கள் உயர் வகுப்பினர். 8 ஐஐடி, 7 ஐஐஎம்களில் 80% ஆசிரியர்கள் உயர் வகுப்பைச் சேர்ந்தவர்கள். ஒன்றிய அரசின் க்ரூப் ஏ பணிகளில் வெறும் 18% மட்டுமே OBC பிரிவைச் சேர்ந்தவர்கள்”இவ்வாறு புள்ளி விவரங்களை பட்டியலிட்டு பேசினார்.
