புதுடெல்லி: `டிரம்பின் இந்திய வருகை, அமெரிக்க அதிபருக்கான தேர்தல் பிரசாரமாக இருக்கக் கூடாது என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆனந்த் சர்மா, டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: அமெரிக்க அதிபர் டிரம்பின் வருகை, நாட்டில் உள்ள முக்கிய பிரச்னைகளுக்கு முடிவுகளை எடுக்கக் கூடியதாக இருக்க வேண்டும். இது தொடர்பாக பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபரும் கூட்டறிவிப்பு செய்ய வேண்டும. இந்தியாவுக்கு வழங்கி வந்த முன்னுரிமை நாடு என்ற அந்தஸ்தை வாபஸ் பெற இருப்பதாக அமெரிக்க அறிவித்திருப்பது கவலை அளிக்கிறது. அமெரிக்காவுக்கு பணியாற்ற செல்லும் இந்தியர்களுக்கு வழங்கப்படும் எச்1பி விசா எண்ணிக்கை குறைப்பும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்தும் டிரம்பின் இந்திய வருகையின்போது பேச வேண்டும்.