புதுடெல்லி: தமிழ், மலையாளம் உள்ளிட்ட 5 தொன்மையான மொழிகளின் வளர்ச்சிக்கு ரூ.29 கோடி மட்டுமே செலவழித்துள்ள மத்திய அரசு, சமஸ்கிருதத்திற்கு மட்டும் 22 மடங்கு அதிகமாக 643 கோடியை செலவழித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சமீபகாலமாக பிரதமர் மோடியும் அவரது அமைச்சரவை சகாக்களும் தமிழ்மொழியை பெருமையாக பேசி வருகின்றனர். பிரதமரின் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி முதல் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் வரை திருக்குறளும், பாரதியின் கவிதைகளும் ஓங்கி ஒலிக்கப்படுகிறது. ஆனால், தமிழைப் பற்றி உயர்வாக பேசினாலும், அந்த மொழியின் வளர்ச்சிக்காக மத்திய அரசு எதையுமே செய்வதில்லை; வழக்கற்று போன சமஸ்கிருதத்தின் வளர்ச்சிக்காகத்தான் கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி வருகிறது என நாடாளுமன்றத்தில் கடந்த 10ம் தேதி பட்ஜெட் மீதான விவாதத்தின்போது மத்திய சென்னை தொகுதி திமுக எம்பி தயாநிதி மாறன் குற்றம்சாட்டி இருந்தார்.அதை தற்போது மத்திய அரசே ஒப்புக் கொண்டுள்ளது. நாடாளுமன்றத்தில் சிவசேனா எம்பி ஒருவர் கேட்ட கேள்விக்கு மத்திய கலாசார துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது. அதில், ‘‘சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் டெல்லியில் நிறுவப்பட்ட ராஷ்டிரிய சான்ஸ்கிரிட் சன்ஸ்தான் அமைப்புக்காக கடந்த 3 ஆண்டில் ₹643.84 கோடி செலவிடப்பட்டுள்ளது. 2019-20ம் நிதியாண்டில் 231.15 கோடியும், 2018-19ல் 214.38 கோடியும், 2017-18ல் 198.31 கோடியும் செலவிடப்பட்டுள்ளது’’ என கூறப்பட்டுள்ளது.