புதுடெல்லி: பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, சில வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் பாக்கி வைத்துள்ளார். அதை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பியோடி விட்டார். இந்தியா விடுத்த வேண்டுகோளின் பேரில், கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் லண்டனில் கைது செய்யப்பட்டார். அப்போது இருந்து அவர் ஜாமீனில் உள்ளார். இந்தியா தொடர்ந்த வழக்கில் அவரை நாடு கடத்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு இங்கிலாந்து உள்துறை அமைச்சர் சஜித் ஜாவீத் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒப்புதல் அளித்தார். நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து லண்டன் ராயல் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு லண்டனில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, தலைமறைவு பொருளாதார குற்றவாளியாக அறிவித்து சொத்துகளை முடக்கும் அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு தடைகோரி தொழிலதிபர் விஜய் மல்லையா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.