புழல்: செங்குன்றம் அருகே முன்விரோத தகராறில் ஆட்டோ டிரைவர் வீட்டுக்கு தீவைத்த போதை ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.செங்குன்றம், நாரவாரிகுப்பம், ரெட்டமலை சீனிவாசன் தெருவை சேர்ந்தவர் நாகூர் மீரான் (28), ஆட்டோ டிரைவர். இவரது பக்கத்து வீட்டில் தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இருவருக்கும் முன்விரோதம் இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு தினேஷ் மது போதையில் நாகூர் மீரான் வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை சமரசம் செய்து அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில் போதையில் இருந்த தினேஷ் முன்விரோதம் காரணமாக நேற்று அதிகாலை 3 மணியளவில் நாகூர் மீரான் வீட்டுக்கு சென்று, வீட்டுக்கு தீ வைத்து வைத்தார். தீ மளமளவென வீடு முழுவதும் பற்றி எரிந்தது. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் மற்றும் வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்து வெளியே வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். அதற்குள் வீட்டிலிருந்த டிவி, கட்டில், மற்றும் பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய போதை ஆசாமி தினேஷை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.