திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த சகோதரிகளான 9 வயது, 7 வயது சிறுமிகள் தாய், தந்தை பிரிந்து சென்றுவிட்ட நிலையில் தனது பாட்டி பராமரிப்பில் வசித்து வந்தனர். இதையடுத்து புதுச்சேரியில் வசித்து வந்த தாயார் இருவரையும் தன்னுடன் அழைத்து சென்றார். புதுச்சேரியில் உள்ள ஒரு பள்ளியில் இருவரும் சேர்க்கப்பட்டு பள்ளிக்கு சென்ற நிலையில், சில மாதங்களுக்கு முன்பு ஒரு சிறுமிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அப்போது, சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, சந்தேகத்தின்பேரில் அவரது சகோதரிக்கும் மருத்துவ பரிசோதனை நடந்தது. அதில், அவரும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. பின்னர் இவ்விவகாரம் தொடர்பாக குழந்தைகள் நலக்குழுவில் புகார் தெரிவிக்கப்பட்டு, சிறுமிகளிடம் விசாரணை நடத்தினர்.