லக்னோ: லக்னோ நீதிமன்ற வளாகத்தில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதில் வழக்கறிஞர்கள் காயமடைந்துள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் லக்னோவின் ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் இன்று பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் 3 வழக்கறிஞர்கள் காயம் அடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு போலீசார் விரைந்தனர். அப்பகுதியில் இருந்து வெடிக்காத 3 நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றினர். வெடிகுண்டு வீசப்பட்ட பகுதியில் ஏராளமான வழக்கறிஞர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், இரண்டு வழக்கறிஞர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக வெடிகுண்டு வீசப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. லக்னோ பார் அசோசியேசன் இணை செயலாளர் சஞ்சீவ் லோதி, தன்னை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.