டெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் அசாருதீன் உள்ளிட்டோருக்கு எதிரான கிரிக்கெட் சூதாட்ட விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட சூதாட்டதரகர் சஞ்சீவ் சாவ்லா, லண்டனில் இருந்து இந்தியாவுக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டார். கடந்த 2000-ம் ஆண்டில் எழுந்த கிரிக்கெட் சூதாட்ட விவகாரத்தில் சிக்கிய சஞ்சீவ் சாவ்லா, லண்டன் தப்பிச் சென்றார். அவரை நாடு கடத்தும்படி, பிரிட்டன் அரசுக்கு 2016-ம் ஆண்டில் இந்திய அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், சஞ்சீவ் சாவ்லாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான உத்தரவில் பிரிட்டன் உள்துறை அமைச்சர் ஜாவீத் கையெழுத்திட்டுள்ளார்.
அவரது அலுவலக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சஞ்சீவ் சாவ்லா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான அனைத்து விவகாரங்களையும் முழுவதும் பரிசீலித்து, அதுதொடர்பான உத்தரவில் கையெழுதிடப்பட்டது.
இதுதொடர்பான வழக்கை கடந்த மாதம் 23ம் தேதி விசாரித்த பிரிட்டன் நீதிமன்றம், சாவ்லாவை 28 நாள்களுக்குள் இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில், பிரிட்டனால் அவர் நாடு கடத்தப்பட்டார். அவரை லண்டனில் இருந்து டெல்லிக்கு பலத்த பாதுகாப்புடன் போலீஸார் இன்று காலை அழைத்து வந்தனர்.