தேனி முல்லை பெரியாற்றில் பட்டப்பகலிலேயே நடைபெறும் மணல் கொள்ளை: விவசாயிகள் வேதனை

தேனி:  தேனி மாவட்டத்திலுள்ள முல்லை பெரியாற்றில் பகல் நேரங்களிலேயே மணல் கடத்தல் பகிரங்கமாக நடைபெற்று வருவது தெரியவந்துள்ளது. தேனி  மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கையால் முல்லை பெரியாறு மற்றும் வைகை ஆறுகளில் மணல் சுரண்டுவது கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் மீண்டும், மணல் கொள்ளையர்கள் தலைதூக்க தொடங்கியுள்ளது, தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இரவு நேரங்களில் மட்டும் ஆற்றில் மணல் அள்ளும் கும்பல், இப்பொழுது பகல் நேரங்களிலும் மணல் அள்ளத் தொடங்கியுள்ளது. ஆற்றிலிருந்து அள்ளும் மணலை கரையோரமாக சேமித்து வைத்து பின்னர்,  டிராக்டர் மற்றும் லாரிகள் மூலம் எடுத்து செல்கின்றனர்.

இதற்காகவே இவர்கள் ஆற்றின் அருகே, விவசாய நிலங்களின் குறுக்கே ஒரு வழித்தடத்தையும் அமைத்து, மணலை கடத்தி விற்பனை செய்து வருகின்றனர். இரவு, பகலாக மணல் சுரண்டப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைவதாகவும், அதனால் விவசாயம் பெருமளவு பாதிக்கப்படுவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், நீதிமன்றங்கள் பல உத்தரவுகளை பிறப்பித்தாலும் மணல் கடத்தல் தொடர்ந்து நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து, இயற்கையை அழிக்கும் இந்த செயலை தொடர் கண்காணிப்பு மற்றும் கடும் நடவடிக்கைகள் மூலம் தடுக்கவேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: