ஈரோடு: ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையில் இருந்து வரும் பவானி ஆற்றுநீரானது காலிங்கராயன் அணைக்கட்டில் தேக்கி வைக்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்து கொடுமுடி ஆவுடையார்பாறை வரை 56.5 மைல் தூரத்திற்கு பாய்ந்து செல்கிறது. இந்த வாய்க்கால் மூலமாக 15 ஆயிரத்து 743 ஏக்கர் பாசனம் பெற்று வருகிறது. வாய்க்காலில் சாயநீர், தோல் தொழிற்சாலைகளின் கழிவுநீர் மற்றும் வீடுகள், குடியிருப்புகளில் இருந்து வரும் கழிவுநீர் ஆகியவை கலப்பதை முற்றிலும் தடுக்கும் வகையில் காலிங்கராயன் வாய்க்காலில் கான்கிரீட் தடுப்புசுவர் அமைக்கப்பட்டுள்ளது. காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து வைராபாளையம் வரை கான்கிரீட் தடுப்புசுவர் அமைக்கப்பட்டுள்ளது. கழிவுநீர் செல்வதற்காக பேபி கால்வாய் அமைத்துள்ளனர். இதனால் கடைமடைக்கு தண்ணீர் வேகமாக செல்கிறது.