சென்னை: தஞ்சை பெரியகோவில் குடமுழக்கு, சோழர்களை பிரதான பேசுபொருளாக மாற்றியுள்ள நிலையில், சோழர்களின் கனவு நகரமான கங்கை கொண்ட சோழபுரத்தை தமிழக கட்டிடக்கலை மாணவி ரம்யா மீட்டெடுத்துள்ளார். தமிழக வரலாற்றில், சோழர்களுக்கு என்றுமே தனிப்பெருமை உள்ளது. அதிலும் இடைக்கால சோழர்களான ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழன் ஆகியோர் பல நாடுகளில் வெற்றி கொடியை நாட்டிய சிறந்த மாமன்னர்கள் ஆவர். சோழர்களின் கனவு நகரமாக கட்டி எழுப்பப்பட்ட கங்கை கொண்ட சோழபுரத்தை தனது கட்டிடக்கலை மூலம் வரலாற்றிலிருந்து மீட்டெடுத்து, காட்சி படுத்திருக்கிறார் தமிழக கட்டிடக்கலை மாணவி ரம்யா. சென்னையை பூர்விகமாக கொண்ட ரம்யா தற்போது, அமெரிக்காவில் பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலைத் துறையில் இளங்கலை பயின்று வருகிறார். சிறு வயது முதல் தமிழ் பாரம்பரியம் மீதும், கலாச்சாரம் மீதும் ஈர்ப்பு கொண்ட இவர், தான் தேர்ந்தெடுத்துள்ள கட்டிடக்கலை மூலம் அதன் சிறப்புகளை வெளிப்படுத்தி வருகிறார். ராஜேந்திர சோழனின் காலம் தொட்டு, 250 வருடங்களாக சோழர்களின் தலைமை இடமாக திகழ்ந்த கங்கை கொண்ட சோழபுரம், பாண்டியர்களின் படையெடுப்பாலும், கால மாற்றத்தாலும் அழிந்து விட்டதாக வரலாற்று ஆய்வுகளிலிருந்து எடுத்து கூறியுள்ளார்.