ஊழியர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி எல்ஐசியை படிப்படியாக கைகழுவுமா அரசு? நிபுணர்கள் எச்சரிக்கை

மும்பை: கோல் இண்டியா நிறுவனத்தில் ஆரம்பித்து ஏர் இண்டியா போன்ற பெரிய நிறுவனங்களை எல்லாம் விற்கும் கதிக்கு ஆளாகி, கடைசியில் பெரும் லாபத்தில் இயங்கும் எல்ஐசியை கைகழுவும் போக்கை அரசு எடுத்ததன் பின்னணியில் நிதி நெருக்கடியின் உச்சகட்டம் தெரிகிறது  என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து ெதரிவித்துள்ளனர்.  எங்கும் தனியார் மயம், எதிலும் தனியார் மயம் என்ற கோஷத்தை மத்திய அரசு எடுத்த நாளில் இருந்தே, ‘மேக் இன் இண்டியா’ கோஷம் மறைந்து விட்டதாக தெரிகிறது. இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள மோடி அரசுக்கு இப்போது அடுத்தடுத்து நிதி நெருக்கடி தொடர்ந்த வண்ணம் உள்ளது. அதனால் தான் பல அரசு துறை நிறுவனங்களை விற்கும் அளவுக்கு போய் விட்டது. இந்தாண்டு  அதன் இலக்கு மொத்தம் 2.1 லட்சம் கோடி நிதி திரட்ட வேண்டும். இந்த இலக்கை எட்ட தான் போராடி வருகிறது. அதற்கு பலிகடாவாகி உள்ளது எல்ஐசி.  

படிப்படியாக அதனை கைகழுவுவது தான் அரசின் நோக்கமாக இருக்கலாம் என்றும் நிபுணர்கள் சிலர் கூறுகின்றனர். கடந்தாண்டு, மிகவும் மோசமான நிதி நிலையில் தவித்து வந்து ஐடிபிஐ வங்கியை எடுத்துக்கொள்ள எல்ஐசிக்கு அறிவுரை வழங்கியது. அதன்படி, ஐடிபிஐ வங்கியின் 51 சதவீத பங்குகளை எல்ஐசி வாங்கியது. ஐடிபிஐ வங்கி இணைந்ததும், அதன் பொறுப்புகளை ஏற்ற எல்ஐசி, தன் காப்பீடு வர்த்தகத்தை பல மடங்கு பெருக்க திட்டங்களை தீட்டியது. எல்ஐசி வங்கியின் பாலிசிக்கள், திட்டங்கள் எல்லாம் ஐடிபிஐ வங்கியில் கிடைக்கும் என்று தகவல்கள் வெளியானது. எல்ஐசியுடன் ஐடிபிஐ இணைந்ததன் மூலம் அதன் நிதி நிலையும் மாறியது. இந்த சூழ்நிலையில், சமீபத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட பட்ஜெட்டில், எல்ஐசியில் அரசு தன் பங்குகளை விற்கும் என்று அறிவித்தார்.அதாவது. எல்ஐசியும் தனியார் பங்களிப்பில் சேரும் என்று சூசகமாக தெரிவித்தார். உண்மை என்னவெனில், மற்ற அரசு நிறுவனங்களை போல, எல்ஐசியும் தனியார் வசம் போகிறது என்பது தான். இந்த தகவல் பரவியதும் எல்ஐசி ஊழியர்களும், அவர்களுக்கு ஆதரவாக ஏற்கனவே, தனியார் மய பீதியில் உள்ள வங்கி ஊழியர்களும் போராட்டத்தில் குதித்தனர்.

இதையடுத்து, பிரதமர் மோடி, எல்ஐசியில் உள்ள அரசு பங்குகளில் ஒரு சிறிதளவு தான் விற்பனை செய்யப்படும். அதனால் எல்ஐசி தன்னாட்சி உரிமை பாதிக்கப்படாது. தனியார் வசம் போகாது என்ற உறுதி கூறியுள்ளார்.  இது தொடர்பாக பொருளாதார நிபுணர்கள் கூறியதாவது: அரசுக்கு இப்போதுள்ள நிலையில், பணம் தேவை. எல்லா மட்டங்களிலும் எதிர்பார்த்த  அளவுக்கு பொருளாதார நிலை சீராக இல்லை. தயாரிப்பு நிறுவனங்கள் முடங்கி விட்டன. அதனால், அரசுக்கு  வரிப்பணம் வரவில்லை. வங்கிகள் வராக்கடனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதனால், வங்கிகளால் அரசுக்கு எந்த வகையிலும் பொருளாதார நிலைமை சீராக்க உதவ முடியவில்லை.

அரசுக்கு நிதி பற்றாக்குறை பெரும் பீதியை கிளப்பி வருகிறது. அதனால் அரசு தன் செலவுகளை குறைத்து வருகிறது. இன்னும் ெசால்லப்போனால், வராக்கடனால் பாதிக்கப்பட்ட வங்கிகளுக்கு இனி அரசு நிதி உதவி செய்யுமா என்பதே கேள்விக்குறி தான். இதை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும், ‘வங்கிகளுக்கு நிதி ேதவைப்படுமானால் அது பற்றி சிந்தித்து தான் முடிவெடுக்கப்படும்’ என்பது போல பேசியுள்ளார். இதனால் நிதி நெருக்கடியை தீர்ப்பதே அரசின் முக்கிய  பொறுப்பாக உள்ளது. அதனால் கண்டிப்பாக அரசு நிறுவனங்களை விற்பதில் இப்போதுள்ள அரசு தயங்காமல் முடிவெடுக்கும் என்பது உறுதி. இவ்வாறு நிபுணர்கள் கூறினர்.

விற்பனைக்கு தனிச்சட்டம்?

* எல்ஐசி பங்குகளை விற்பது என்பது அவ்வளவு சுலபமல்ல. காரணம், அதில் முழுக்க  முழுக்க மக்கள் பணம் தான் காப்பீடு தொகையாக குவிந்துள்ளது. 95 சதவீத பங்குகள் அதாவது, காப்பீட்டு தொகையாக உள்ளது. அரசுக்கு 5 சதவீதம் தான் பங்கு உள்ளது.

* கடந்தாண்டு  மகாராஷ்டிரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவற்றில் வராக்கடன் பிரச்னை  உச்சகட்டத்ைத அடைந்ததும், வாடிக்கையாளர்கள் டிபாசிட்டை எடுக்க  துவங்கினர். இதனால், வங்கிகள் இயங்க முடியாத அளவுக்கு தள்ளாடின. இதுபோல, எல்ஐசிக்கு நிலைமை ஏற்பட்டால் அரசு தவிக்க வேண்டியிருக்கும்.

* 1956ல் எல்ஐசி துவங்கியபோது அதன் மொத்த முதலீடு 5 கோடி ரூபாய்; இப்போது 2 லட்சம் கோடி.

* எல்ஐசியை தனியார் மயமாக்க தனிச்சட்டம் போட வேண்டும்;

* ஊழியர்கள் கடும் எதிர்ப்பை மீறி சாத்தியமா? இதனால் இந்த நிதி  ஆண்டில் எதுவும் நடக்காது என்கின்றனர்  நிபுணர்கள்.

Related Stories: