நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னுரில் நள்ளிரவில் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால் கடும் அவதிக்கு ஆளாவதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். குன்னுர் நகராட்சிக்குட்பட்ட 30 வார்டுகளுக்கு ரெலியா அணை, ஜிம்கானா, கரன்சி, பந்துமை, பாரஸ்டியல் தடுப்பு அணைகள் உள்ளிட்டவை குடிநீர் ஆதாரமாக இங்கு செயல்பட்டு வந்தன. இங்குள்ள 30 வார்டுகளுக்கும் தினமும் 36 லட்சம் குடிநீர் தேவைப்படுகிறது. 43.6 அடி உயரம் கொண்ட ரெலியா அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் அங்கிருந்து தண்ணீர் எடுத்து மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. நீர் ஆதாரங்கள் நிரம்பியுள்ள நிலையிலும் ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்கு ஒரு முறையே தண்ணீர் விநியோகிக்கப்படுவதாகவும், அதுவும் இரவு நேரத்திலேயே தண்ணீர் விடப்படுவதாகவும் குன்னுர் மக்கள் கூறுகின்றனர்.