ஹுப்பள்ளி: பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால் இன்று உலகம் முழுவதும் யோகா சர்வதேச தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதனால் சர்வதேச அளவில் யோகா பயிற்சியை கொண்டு சென்ற பெருமை இந்தியாவையே சாரும் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு புகழாரம் சூட்டினார். கர்நாடகா மாநிலம் ஹுப்பள்ளி ரயில்வே மைதானத்தில் யோகா சிகிச்சை மற்றும் யோகா பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்துகொண்டு பேசியதாவது: நாள்தோறும் யோகா பயிற்சி மேற்கொண்டால் உடலை நல்ல ஆரோக்யத்துடன் வைத்துக்கொள்ள முடியும். யோகா குரு பாபா ராம்தேவ் நாட்டின் மூலை முடுக்குகளுக்கு சென்று யோகா பயிற்சி அளித்து வருகிறார். அதனால்தான் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாபா ராம்தேவை குரு என்றே அழைக்கிறோம்.