புதுச்சேரி அருகே நிர்வாண நிலையில் கிடந்த சடலம்: நித்தியானந்தாவின் சீடரை காரில் கடத்தி படுகொலை

வில்லியனூர்: புதுச்சேரி பாகூர் அருகே நித்தியானந்தாவின் சீடர் காரில் கடத்தி முகத்தை பிளாஸ்டிக் கவர்  மூலம் மூடி, மூச்சு திணற வைத்து கொலை செய்யப்பட்டு நிர்வாண நிலையில் கிடந்தார். புதுச்சேரி அருகே  வில்லியனூர் அடுத்த ஏம்பலம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் வஜ்ரவேல் (51). இவர் நித்தியானந்தாவுக்கு புதுச்சேரியில் உள்ள முக்கிய சீடர்களில் ஒருவராக இருந்தார்.  நித்தியானந்தா பெயரில் 2 பேக்கரி நடத்தி வந்தார். ஏம்பலம் பகுதியில் நித்தியானந்தா ஆசிரமம் அமைய முக்கிய காரணமாக இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் அவரது பெரிய மாமியார் வசந்தா என்பவர், அவர் வாங்கிய கடனை திருப்பிக் கொடுப்பதற்காக வஜ்ரவேலுக்கு போன் செய்துள்ளார்.  அப்போது பேக்கரியில் இருந்த வஜ்ரவேலு தனது காரை எடுத்துக்கொண்டு வில்லியனூர் அடுத்த செம்பியம்பாளையம் பகுதியில் உள்ள வசந்தா வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அவரிடம் இருந்து 2 லட்சத்தை வாங்கிக் கொண்டு கிளம்பியுள்ளார்.

ஆனால் வெகுநேரமாகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை. அவரது மனைவி வள்ளியம்மாள் செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால் வஜ்ரவேலின் செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் பயந்துபோன அவர் தனது உறவினர்களை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார். அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் கரிக்கலாம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இதனிடையே நேற்று மாலை, குருவிநத்தம் சமூக நலக்கூடம் எதிரில், குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் வஜ்ரவேலின் கார் நின்றுகொண்டிருந்ததை உறவினர்கள் பார்த்து, பாகூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர்.

அப்போது, காரில் நிர்வாண கோலத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது தலையில் பிளாஸ்டிக் கவர் இருந்தது. இதனால் பிளாஸ்டிக் கவர் மூலம் முகத்தை மூடி, மூச்சு திணற வைத்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனிடையே கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு காரில் பதிவாகியிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். பின்னர், வஜ்ரவேலின் சடலத்தை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Related Stories: