புதுச்சேரி: புதுவையில் கவர்னர் கிரண்பேடிக்கு மிரட்டல் விடுத்தவருக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசுக்கு எழுந்துள்ள நிலையில் அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். புதுவையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கவர்னர் மாளிகை மற்றும் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனையில் அது புரளி என தெரியவந்தது. அதன்பிறகு போலீசார் விசாரணை நடத்தியதில் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த டெல்லியைச் சேர்ந்த நித்திஷ்குமார் ஷர்மா மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது 507 பிரிவின்கீழ் காவல்துறை வழக்குபதிவு செய்தது. இதனிடையே கவர்னர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த டெல்லி வாலிபரை சக கைதிகள் சரமாரி அடித்து உதைத்தனர். இதில் காயமடைந்த அவர் 8 கைதிகள் மீது காலாப்பட்டு போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார்.