நாட்டரசன்கோட்டையில் செவ்வாய் பொங்கல் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பொங்கல் வைத்து அசத்தினர்

சிவகங்கை: நாட்டரசன்கோட்டையில் நகரத்தார் சமூகம் சார்பில் நடந்த செவ்வாய் பொங்கல் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து அசத்தினர். சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டையில் கண்ணுடையநாயகி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கல் முடிந்து வரும் முதல் செவ்வாய்கிழமை நாளில் நகரத்தார் சமூகத்தினர் பொங்கல் விழா நடத்துவர். இதை ‘செவ்வாய் பொங்கல் விழா’ என அழைப்பர். நகரத்தார் சமூக ஆண்கள் திருமணம் முடிந்தவுடன் அவர்களை ‘ஒரு புள்ளி’ என சமூகத்தில் கணக்கிடுவர். இவ்வாறு புள்ளிகள் எண்ணிக்கையில் பொங்கலிடும் நிகழ்ச்சி, நாட்டரசன்கோட்டையில் மட்டுமே நடப்பதால் இந்த விழா முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்தாண்டு செவ்வாய் பொங்கல் விழா நேற்று மாலை தொடங்கியது.

இதையொட்டி முதல் பொங்கல் பானை வைக்க தேர்வு செய்யப்பட்ட குடும்பத்தினர் சிறப்பு செய்யப்பட்டு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் 5 மணிக்கு பொங்கல் வைக்க தொடங்கியவுடன் தொடர்ந்து மற்றவர்களும் பொங்கலிட தொடங்கினர். முதல் பொங்கல் பானை மட்டும் மண் பானையிலும், மற்றவர்கள் வெண்கல பானைகளிலும் பொங்கல் வைத்தனர். நகரத்தார் சார்பில் 912 பேர் பொங்கலிட்டனர். இவர்கள் தவிர நேர்த்திக்கடனுக்காக நூற்றுக்கணக்கானோர் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபாடு செய்தனர். இரவு அம்மன் சுற்றி வரும்போது, ஆடுகள் பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. இவ்வாறு கோயில் முன் அமைந்துள்ள இடத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொங்கல் பானைகள் வைக்கப்பட்டு, பெண்கள் வரிசையாக பொங்கலிடும் நிகழ்ச்சியை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர்.

இதுகுறித்து நகரத்தார் கூறுகையில், ‘‘வேண்டுதல் அடிப்படையில் பல நூற்றாண்டுகளாக தொடர்ச்சியாக இந்த விழா நடைபெற்று வருகிறது. தற்போது ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடி விழா நடத்துவது என்பது குறைந்துவிட்டது. ஆனால், இவ்வூரில் செவ்வாய் பொங்கல் வைப்பவர்களின் எண்ணிக்கை குறையாமல் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. மற்ற விழாக்களுக்கு வரவில்லை என்றாலும் இந்த செவ்வாய் பொங்கலுக்கு அனைவரும் வந்துவிடுவர். நீண்ட நாட்களுக்கு பின் சொந்த ஊரில் ஓரிடத்தில் அனைவரும் சந்திப்பது மிகவும் மகிழ்ச்சியானது. இதில் மாப்பிள்ளை மற்றும் பெண் பார்க்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது’’ என்றனர்.

கண்டுகொள்ளாத சுற்றுலாத்துறை

நாட்டரசன்கோட்டையில் நடைபெறும் செவ்வாய் பொங்கலுக்கு வெளி மாவட்டங்கள், வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வருவர். இதற்கேற்றவாறு குடிநீர் வசதி, குப்பைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் செய்யப்படும். ஆண்டுதோறும் சுற்றுலாத்துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அழைத்து வரப்படுவதும் வழக்கம். அரசு சார்பில் நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகளும் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு பேரூராட்சி நிர்வாகம், சுற்றுலாத்துறை சார்பில் எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. போதிய ஏற்பாடுகள் இல்லாதது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், தனிப்பட்ட பயணமாக பிரான்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை சேர்ந்த சிலர் மட்டும் செவ்வாய் பொங்கலை காண வந்திருந்தனர்.

Related Stories: