புதுடெல்லி: அரசு அலுவலகங்கள் மற்றும் பெரிய நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அலுவல் நேரத்தில் 5 நிமிடங்கள் இடைவேளை கொடுத்து யோகா பயிற்சி அளிக்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம், மொரார்ஜி தேசாய் தேசிய யோகா பயிற்சி நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இதற்கான திட்டத்தை வகுத்துள்ளது. யோகா துறையில் பிரபலமான பல நிபுணர்களின் யோசனைகளும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த புதிய திட்டம் ஒய்-பிரேக் என்ற பெயரில் மத்திய அரசின் ஆயுஷ் மைச்சகத்தால் கடந்த திங்களன்று சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த யோகா நிகழ்ச்சி திட்டத்தில் டாடா கெமிக்கல்ஸ், ஆக்சிஸ் வங்கி உள்பட பிரபலமான 15 பெரிய நிறுவனங்கள் தாமாக முன்வந்து கலந்து கொண்டுள்ளன. அலுவலக நேரத்தில் 5 நிமிடங்கள் இடைவேளை விடப்பட்டு யோகா பயிற்சி தரப்படுகிறது. கடினமாக இல்லாமல் எளிதாக இருக்கும் வகையில் பயிற்சி தரப்படுகிறது. இதனால், பணி சுமை காரணமாக மனஅழுத்தத்துடன் இருக்கும் அதிகாரிகள், ஊழியர்கள் மன அழுத்தம் குறைந்தும், புத்துணர்ச்சி பெற்றும் மீண்டும் பணியைத் தொடர முடியும் என்று கருத்தப்படுகிறது.