புதுடெல்லி: ஆளில்லா விமானம் வைத்திருப்பவர்கள் தங்களுடைய பெயரையும் அதனை இயக்குபவர் பெயரையும் வரும் 31ம் தேதிக்குள் தாங்களாகவே முன்வந்து பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. டிரோன்கள் எனப்படும் ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கு விமானப் போக்குவரத்து துறை சில கட்டுப்பாடுகள், பாதுகாப்பு விதிகளை கொண்டு வந்துள்ளது. இவற்றை ராணுவத் தளங்கள், விமான நிலையங்கள், மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் உள்ள பகுதி உள்ளிட்ட முக்கிய இடங்களில் பயன்படுத்த தடை விதித்துள்ளது. இந்நிலையில், ஈரானின் புரட்சிகர ராணுவ தளபதி காஸ்சிம் சுலைமானி கடந்த 3ம் தேதி, அமெரிக்க ராணுவத்தின் டிரோன் தாக்குதலில் ஈராக்கின் பக்தாத் விமான நிலையத்தில் வைத்து கொல்லப்பட்டார்.