ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை அருகே அம்மன் கோயிலில் பூட்டை உடைத்து 3 சவரன் தாலி மற்றும் உண்டியல் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குன்னத்தூர் கிராமத்தில் கனக நாச்சியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் திருவிழா நடத்தப்படுகிறது. மேலும் தினமும் காலையில் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடத்தப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை கோயில் பூசாரி மாரியப்பன், பூஜைகள் முடிந்தபிறகு கோயிலை பூட்டிவிட்டு சென்றார். இன்று காலை கோயிலை திறக்க வந்தபோது கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இச்சம்பவத்தை ஊர் கவுண்டரான முனிசாமியிடமும் ஊர் பொதுமக்களிடமும் தெரிவித்தார். அவர்கள் கோயிலுக்கு சென்று பார்த்தபோது அம்மன் கழுத்தில் இருந்த 3 சவரன் தங்க தாலி, கோயிலின் உள்ளே வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைத்து பணத்தை மர்ம நபர்களால் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.