ரேஷன் அரிசி கடத்துவோர் மீது குண்டர் சட்டம் பாயும் : அமைச்சர் காமராஜ் எச்சரிக்கை

மன்னார்குடி : ரேஷன் அரிசி கடத்துவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என அமைச்சர் காமராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அமைச்சர் காமராஜ் அளித்த பேட்டி: தமிழகத்தில் கடந்த காலங்களில் அதிக அளவில் நடைபெற்று வந்த ரேஷன் அரிசி கடத்தல் உணவு கடத்தல் பிரிவின் தொடர் நடவடிக்கையால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அடிதட்டு மக்களின் வாழ்வாதாரத்திற்காக வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்களை கடத்துவது சட்டப்படி பெரிய குற்றமாகும். இத்தகைய நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபடுவோர் மீது பாரபட்சமின்றி குண்டர் சட்டம் பாயும்.

தமிழகம் முழுவதும் அனைத்து குடும்ப அட்டைதாரரும் பயன்பெறும் வகையில் ரூ.1000த்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு 9ம்தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்கு எந்த பகுதிக்கு, எந்த தேதியில் வழங்கப்படும் என்ற பட்டியலும் அந்தந்த ரேஷன் கடைகளில் ஒட்டப்பட்டுள்ளது. அதனை பார்த்து அப்பகுதி மக்கள் அந்த தேதியில் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அமைச்சர் காமராஜ் கூறினார்.

Related Stories: