இன்று ஆருத்ரா தரிசனம் செப்பறை கோயிலில் திருவாதிரை தேரோட்டம்: திரளானோர் வடம்பிடித்தனர்

தாழையூத்து: நெல்லை அடுத்த ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோயிலில் திருவாதிரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இதில் திரளாகப் பங்கேற்ற பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்து நிலையம் சேர்த்தனர். நெல்லை அடுத்த ராஜவல்லிபுரத்தில் உள்ள பழம்பெருமைமிக்க செப்பறை அழகிய கூத்தர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி திருவாதிரை திருவிழா வெகுவிமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டுக்கான திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. 7ம் திருநாளான கடந்த 7ம் தேதி காலை அழகிய கூத்தர் விழா மண்டபம் எழுந்தருளும் வைபவம் நடந்தது. இதையடுத்து மாலை சிவப்பு சாத்தி அலங்கார தீபாராதனை நடந்தது.

8ம் தேதி காலை வெள்ளை சாத்தியும், மாலை பச்சை சாத்தியும் சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. விழாவின் சிகரமான தேரோட்ட வைபவம் நேற்று நடந்தது. இதையொட்டி சுவாமி அழகிய கூத்தர் திருத்தேருக்கு நேற்று காலை எழுந்தருளினார். இதைத்தொடர்ந்து 11 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. இதில் நெல்லை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பெருந்திரளாகப் பங்கேற்ற பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள், ஹரகர மகாதேவா, தில்லையம்பலம் சிற்றம்பலம் என பல்வேறு சரண கோஷங்கள் முழங்க தேரை வடம்பிடித்து நிலையம் சேர்த்தனர். இந்நிலையில் திருவாதிரை திருவிழா தினமான இன்று (10ம் தேதி) அதிகாலை 2 மணிக்கு சுவாமிக்கு மகா அபிஷேக பூஜை துவங்கியது. இதைத்தொடர்ந்து கோ பூஜை, பசு தீபாராதனை, ஆருத்ரா தரிசனமும், மாலை அழகிய கூத்தர் வீதியுலாவும் நடக்கிறது.

Related Stories: