பெரம்பூர்: வியாசர்பாடி மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமார் (22). இவரது நண்பர் கொடுங்கையூர் கண்ணதாசன் நகரை சேர்ந்த முரளிதரன் (28). இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு இருவரும் வியாசர்பாடி 3வது பள்ளத்தெரு பகுதியில் நின்று பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த பாலகுமார் என்பவர், இவர்களிடம் தகராறில் ஈடுபட்டார். சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியது. அப்போது, பாலகுமார் மறைத்து வைத்திருந்த அளிவாளால் சாந்தகுமார் மற்றும் முரளிதரனை வெட்ட முயன்றார். சுதாரித்துக்கொண்ட இருவரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதை பார்த்த பொதுமக்கள் அலறியடித்து கொண்டு வீட்டிற்குள் ஓடினர். விடாமல் துரத்தி சென்ற பாலகுமார், சாந்தகுமார் மற்றும் முரளிதரனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினார்.