சித்தூர்: சித்தூரில் முதல்வர் ஜெகன்மோகன் வருகையையொட்டி பேனர், கட்அவுட் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதில் தங்களுக்கான இடத்தை பிடிக்க கட்சியினர் ஆர்வம் காட்டி வருகின்றனர். சித்தூர் மாவட்டத்திற்கு முதல்வர் ஜெகன்மோகன் நாளைமறுதினம் வருகை தருகிறார். தொடர்ந்து அம்மா மடி திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இதையொட்டி மொசானிக் விளையாட்டு மைதானத்தில் ஹெலிபேட் தளம் அமைக்கப்பட்டு வருகிறது. முன்னதாக ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி அங்கிருந்து கலெக்டர் பங்களா வழியாக திருத்தணி சித்தூர் தேசிய நெடுஞ்சாலை, காந்திசிலை, எம்எஸ்ஆர் சர்க்கிள், வேலூர்-சித்தூர் சாலை, துர்கா நகர் காலனி வழியாக பி.வி.கே.என் அரசு கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அம்மா மடி திட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்ற உள்ளார்.