புதுடெல்லி: கடந்த 2014-15ம் நிதியாண்டில் 1,038 கோடி அளவுக்கு கருப்பு பணம் வங்கிகள் மூலமாக ஹாங்காங்குக்கு மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக 51 நிறுவனங்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. கருப்பு பணத்தை ஹாங்காங் அனுப்புவதற்காக பாங்க் ஆப் இந்தியா, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் 48 நிறுவனங்கள் 51 நடப்பு கணக்குகளை தொடங்கியுள்ளதாகவும், இதன் மூலம் ஹாங்காங்குக்கு 1,038.34 கோடி அளவுக்கு கருப்பு பணம் கடந்த 2014-15ம் நிதியாண்டில் அனுப்பப்பட்டுள்ளதாக சிபிஐக்கு தகவல் கிடைத்தது.
இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தியது. மொத்தம் 51 நிறுவனங்கள் இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இவற்றில் பெரும்பாலானவை சென்னையைச் சேர்ந்தவர்களின் நிறுவனங்கள். 24 வங்கி கணக்குகள் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு முன்பணம் என்ற பெயரில் 488.39 கோடி அளவுக்கு நிகரான தொகை அமெரிக்க டாலர்களுக்காக கடந்த 2014-15ம் நிதியாண்டில் செலுத்தப்பட்டுள்ளது.