மாணவர்களின் குரல் ஒவ்வொரு நாளும் ஒடுக்கப்படுகிறது: ஜேஎன்யூ மாணவர்கள் தாக்கப்பட்டது குறித்து சோனியா காந்தி அறிக்கை

டெல்லி: மாணவர்களின் குரல் ஒவ்வொரு நாளும் ஒடுக்கப்படுவதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்தார். டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யூ) கடந்த சில நாட்களுக்குமுன் போராட்டம் நடந்தது. இதில் வன்முறை ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு திடீரென மீண்டும் வன்முறை வெடித்தது. இரும்பு கம்பி, குச்சிகள் மற்றும் கம்பிகளால் ஆயுதம் ஏந்திய முகமூடி அணிந்த 20 பேர் கொண்ட கும்பல், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கண்மூடித்தனமாக தாக்கி, பல்கலை வளாகத்தில் இருந்த சொத்துக்களை சேதப்படுத்தினர்.

ஏறக்குறைய இரண்டு மணி நேரம் வளாகத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவர் ஆயி கோஷ் உட்பட 28 பேர் காயமடைந்தனர். இந்நிலையில் இது தொடர்பாக இடதுசாரி அமைப்பு மாணவர்களின் பிரிவான ஜேஎன்யூ மாணவர் சங்கம் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புடன் இணைந்த ஏபிவிபி ஆகிய இரு மாணவர் அமைப்புகளும், பல்கலையில் நடந்த வன்முறைக்கு ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் (ஏ.எம்.யூ), ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் (ஜே.யூ), பிரசிடென்சி பல்கலைக்கழக மாணவர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்த சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் வளாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதையடுத்து நாடு முழுவதும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது டெல்லி ஜேஎன்யூ மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான தாக்குலை கண்டித்து, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்; மாணவர்களின் குரல் ஒவ்வொரு நாளும் ஒடுக்கப்படுகிறது. மோடி அரசின் ஒத்துழைப்புடன் இந்திய இளைஞர்கள் தாக்கப்பட்டு தாக்கப்பட்டு உள்ளனர். எலும்பை உறையவைக்கும் வகையில் கே.என்.யு. மாணவர்களும், ஆசிரியர்களும் தாக்கப்பட்டுள்ளனர். அதிருப்தி குரல்களை ஒடுக்க மத்திய அரசு எந்த அளவுக்கு கொடூரமாக நடக்கும் என்பதற்கு உதாரணம் கே.என்.யு. தாக்குதல் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: