ரஞ்சியில் தமிழகம் அபார பந்துவீச்சு

கான்பூர்: உத்தரப்பிரதேச அணியுடனான ரஞ்சி கோப்பை எலைட் பி பிரிவு லீக் ஆட்டத்தில், தமிழக அணி சிறப்பாகப் பந்துவீசி ரன் குவிப்பை கட்டுப்படுத்தியது. கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியின் முதல் நாள் ஆட்டம் கனமழை காரணமாக ரத்தான நிலையில், 2ம் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன் எடுத்திருந்த தமிழகம் நேற்று 180 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. கங்கா ஸ்ரீதர் 45, சூர்யபிரகாஷ் 51, கேப்டன் விஜய் ஷங்கர் 24, ஜெகதீசன் 18, சாய் கிஷோர் 14* ரன் எடுத்தனர்.

உ.பி. பந்துவீச்சில் சவுரவ் குமார் 5, ராஜ்பூத் 4, அன்சாரி 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய உ.பி. அணி 3ம் நாள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 170 ரன் எடுத்துள்ளது (66 ஓவர்). முகமது சைப் 77, உபேந்திரா யாதவ் 36, கேப்டன் சவுரவ் குமார் 18 ரன் எடுத்தனர். ராஜ்பூத் (0) களத்தில் உள்ளார். தமிழக பந்துவீச்சில் நடராஜன் 3, சாய் கிஷோர் 2, விக்னேஷ், சித்தார்த், அபராஜித் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இன்று கடைசி நாள் என்பதால், இப்போட்டி டிராவை நோக்கி செல்கிறது.

Related Stories: