மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து சரிந்த வண்ணம் உள்ளது. நேற்று முன்தினம், விநாடிக்கு 1929 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 1926 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 600 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு, விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக நேற்று காலை முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.