சென்னை: ‘ஒலிம்பிக் போட்டியில் டேபிள் டென்னிஸ் போட்டியில் கட்டாயம் பதக்கம் வெல்வோம்’ என்று இந்திய அணியின் கேப்டன் சரத்கமல் தெரிவித்தார். ஜப்பான் தலைநகர் டோக்யோவில் அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிநடைபெற உள்ளன. இந்தப் போட்டியில் பங்கேற்கும் நாடுகள் தகுதிச்சுற்று போட்டிகள் மூலம் தேர்வு செய்யப்படும். டேபிள் டென்னிஸ் போட்டிக்கான அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிச்சுற்று போட்டி ஜன.22 முதல் 26ம் தேதி வரை போர்ச்சுகல் நாட்டில் நடைபெறும். இந்த போட்டியில் பங்கேற்க உள்ள 5பேர் கொண்ட இந்திய அணிக்கான பயிற்சி முகாம் சென்னையில் டிச.20ம் தேதி தொடங்கியது. இம்மாதம் 30ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த முகாமை 8 முறை தேசிய சாம்பியன் பட்டம் வென்றவரும், முன்னாள் வீரருமான கமலேஷ் மேத்தா நேற்று பார்வையிட்டார். அப்போது வீரர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.