உள்ளாட்சி தலைவருக்கு போட்டியிடும் வாலிபர் ஓடி, ஓடி வாக்குச் சேகரிப்பு

*லஞ்சத்தை ஒழிப்பேன் என வாக்குறுதி

விருதுநகர் : விருதுநகர் அருகே கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் வாலிபர் தெரு தெருவாக ஓடிச் சென்று வாக்கு சேகரித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். லஞ்சத்தை ஒழிப்பேன், நலத்திட்ட உதவிகள் மக்களை சென்றடைய பாடுபடுவேன் என வாக்குறுதி அளித்து வருகிறார். விருதுநகர் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்களில் 450 கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு 1,727 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் விருதுநகர் அருகே சத்திரரெட்டியபட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு அமிர்தபாண்டி(23) பின்தங்கிய குடும்பத்தில் பிறந்தவர்.

மாரத்தான் ஓட்ட போட்டிகளில் பங்கேற்கும் அமிர்தபாண்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கல் செய்ய சத்திரரெட்டியபட்டியில் இருந்து ஓடி வந்து தாக்கல் செய்வதாக இருந்தார். தகவலறிந்த போலீசார் எதிர்ப்பால் ஓடி வந்து வேட்புமனு தாக்கல் செய்வதை கைவிட்டார். தற்போது தலைவர் பதவிக்கு 8 பேர் போட்டியிடுகின்றனர்.  தற்போது வாக்குச் சேகரிப்பில் வித்தியாசமாக சத்திரரெட்டியபட்டி, உசிலம்பட்டி, மின்வாரிய காலனி, கவுசிங் போர்டு காலனி, காமராஜர் காலனி உள்ளிட்ட 9 பகுதிகளிலும் தெரு, தெருவாக ஓடிச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.

அமிர்தபாண்டி கூறுகையில், ‘கிராமத்தில் குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதியில்லை. அரசு நலத்திட்ட உதவிகள் மக்களை சென்று சேருவதில்லை. எதற்கெடுத்தாலும் ஊரில் லஞ்சம் தலை விரித்தாடுகிறது. மக்கள் அறியாமையில் இருப்பதால் லஞ்சம் கேட்கிறார்கள். ஜாதி, மதம், இனம் கடந்து போட்டியிடுகிறேன். காலம் கட்ட கனவு தேசத்தை 2020ல் உருவாக்க வேண்டும். இளைஞர்கள் ஆதரவு உள்ளது. வெற்றி பெற்றால் கிராமத்தை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்வேன்’ என்றார்.

Related Stories: