சென்னை: மக்கள் விரோத நடவடிக்கைகளை கைவிட்டு நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் மத்திய பாஜக அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதமாக சரிந்து ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளதை மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். 6 ஆண்டுகால பாஜக ஆட்சி பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தாதன் அடையாளம் இது என்று ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அதிமுக அரசின் நிர்வாக திறமையின்மையால் தமிழக வளர்ச்சியும் குன்றியுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
ஐஎம்எப் எச்சரிக்கை
இந்தியாவில் நிலவும் பொருளாதார சரிவை பார்த்தால் உடனடியான சில அவசர நடவடிக்கைகள் கட்டாயம் என்பதை உணர்த்துகிறது. கொள்கை அளவில் பெரும் மாற்றங்களை அரசு கொண்டு வர வேண்டும். அப்படி செய்தால் தான் பொருளாதார சரிவை இப்போதாவது கட்டுப்படுத்த முடியும். பொருளாதார வளர்ச்சிக்கு உள்நாட்டு உற்பத்தி விகிதம் அதிகரிக்க வேண்டும். அப்படி அதிகரிக்க வேண்டுமானால் அரசு உதவி தேவை. இப்போதுள்ள நிலையில், அரசு அளவுக்கு மீறி நிதி உதவி செய்ய முடியாது. ஒரு பக்கம் அரசுக்கு உள்ள கடன்கள் மீதான வட்டியை கட்டவே பல ஆயிரம் கோடி தேவை. அப்படியிருக்கும் போது பொருளாதார வளர்ச்சிக்கு அரசு எதுவும் செய்ய வழியில்லை. சில கொள்கை முடிவுகளை தான் எடுக்க வேண்டும். அடுத்த ஆண்டுக்கான உள்நாட்டு மொத்த வளர்ச்சி விகிதம் 7 ஆக மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், நிலைமையை அறிந்து அதை 6.1 சதவீதமாக ஐஎம்எப் குறைத்தது. இந்தியாவின் ரிசர்வ் வங்கி தற்போது, 6.1 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைத்து விட்டது. நுகர்வோர் வாங்கும் சக்தி குறைந்து வருகிறது; அதே வேகத்தில் தயாரிப்பு நிறுவனங்களின் வளர்ச்சியும் முடங்கி வருகிறது என்பதை தான் இது காட்டுகிறது.