தவணைமுறை நகை சேமிப்பு திட்டத்தில் மோசடி : நகைக்கடை மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்

சென்னை: நகை சேமிப்பு திட்டத்தில் மோசடி செய்த நகைக்கடை மீது கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் அளிக்கப்பட்டது. சென்னை, மயிலாப்பூர், புரசைவாக்கம், அண்ணா நகர் போன்ற இடங்களில் செயல்பட்டு வரும் கேரளா பேஷன் ஜுவல்லரி நகைக்கடையில் ஜி.எல் பிளஸ் என்ற  1999 செலுத்தி தங்க நகை சேமிப்பு திட்டத்தில் பொதுமக்கள் பலர் உறுப்பினராக சேர்ந்துள்ளனர். மேலும் பலர் பழைய தங்க நகைகளை கொடுத்து விட்டு புதிய தங்க நகைகளாக மாற்றும் திட்டத்திலும் இணைந்தனர். இதில் பல மாதங்களாக பொதுமக்கள் இந்த திட்டத்தில் பல கோடி ரூபாய் வரை செலுத்தியுள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு  முன்பு விளம்பர கட்டணம் 10 கோடி தராததால் நிறுவனத்தின் பங்குதாரர் சுனில் செரியன் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் சீட்டு கட்டிய பலருக்கும் முதிர்வு தொகைக்காக வழங்கப்பட்ட காசோலைகள் கே.எப்.ஜே வங்கி கணக்கில் பணம் இல்லாமல் திருப்பி வந்ததால் பணம் செலுத்தியவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதனால் நகையாவது பெற்று கொள்ளலாம் என்று  கே.எப்.ஜே கடைக்கு சென்று பார்க்கும் போது கடை மூடி இருப்பதாக குற்றம் சாட்டினர். இது தொடர்பாக மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், அங்கு எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தனர். மேலும் கே.எப்.ஜே கடையில் நாங்கள் செலுத்திய பணம் மற்றும் நகைகளை மீட்டு தர வேண்டும் என்றனர்.

Related Stories: