திருச்சி: 2,000 கோடி பிட்காயின் ேமாசடி தொடர்பாக திருச்சி, புதுகையை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்தவர் ராஜதுரை. இவரது மனைவி ஸ்வேதா. கடந்த மார்ச் மாதம் கோபியை சேர்ந்த கங்காதரன் என்பவரை தம்பதியினர் சந்தித்து ஆன்லைன் மூலம் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்வதாக கூறி உள்ளனர். அதில் 2.80 லட்சம் முதலீடு செய்தால் மாதம்தோறும் 20 ஆயிரம் வரை கமிஷன் கொடுப்பதாக கூறி உள்ளனர். அதை நம்பிய கங்காதரன், அவர்களிடம் 2.80 லட்சம் கொடுத்துள்ளார். முதல் நான்கு மாதங்கள் கமிஷன் தொகை கொடுத்தவர்கள் அதன்பின்னர் தரவில்லை. இதுபற்றி கங்காதரன் விசாரித்தபோது, பெயரளவிற்கு ஆன்லைன் மூலம் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்வது போன்ற தோற்றத்தை உருவாக்கி, முதலீட்டாளர்களிடம் பெற்ற பணத்தை இந்திய அரசால் தடை செய்யப்பட்ட பிட்காயின் எனப்படும் பணமில்லா பரிவர்த்தனையில் முதலீடு செய்து அரசை ஏமாற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து கங்காதரன் மற்றும் முதலீட்டாளர்கள் 20 பேர், கோபி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ராஜதுரை கும்பல் இந்தியா முழுவதும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகவர்களை நியமித்து மோசடியில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த ஏஜென்ட்களில் ஒருவரான கார்த்தி என்பவர் திருச்சி ஜங்ஷன் வழிவிடு முருகன் கோயில் அருகில் அலுவலகம் வைத்திருந்தார். இவர், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள சங்கம்பட்டியை சேர்ந்த முருகேசன்(30) என்பவரிடம் 36.40 லட்சம் முதலீடு பெற்றார். இதற்கு கமிஷன் தொகையாக 5 லட்சத்து 25 ஆயிரம் தந்துள்ளனர். அதன்பிறகு பணம் எதுவும் தரவில்லை.