புதுடெல்லி: தெலங்கானாவில் நடந்த என்கவுன்டரில் 4 விசாரணை கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த விவகாரத்தில் சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளதாக தொடரப்பட்ட வழக்கை நாளை விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த பெண் டாக்டர் டிஷாவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 4 பேர் கொண்ட கும்பல் கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொன்றது. இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த கொலையில் தொடர்புடைய குற்றவாளிகள் 4 பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதைத் தொடர்ந்து கடந்த வாரம் 5ம் தேதி அதிகாலை 3 மணிக்கு குற்றவாளிகள் 4 பேரையும் பெண் டாக்டரை எரித்துக் கொன்ற இடத்திற்கு விசாரணை தொடர்பாக அழைத்து சென்றனர். அப்போது அந்த குற்றவாளிகள் போலீசாரின் துப்பாக்கியை பறித்து சுடுவதற்கும் கற்களால் தாக்குவதற்கும் முயன்றதாகக் கூறப்படுகிறது.