டெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கி நிதி மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியான நீரவ் மோடியை இரு தினங்களுக்குமுன் மும்பை சிறப்பு நீதிமன்றம் தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளியாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து ரூ.2,400 கோடி மதிப்பிலான அவரது சொத்துகளை பறிமுதல் செய்து ஏலத்தில் விடும் முயற்சியில் அமலாக்கத்துறை இறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பான அமலாக்கத்துறையின் விண்ணப்பத்தை மும்பை நீதிமன்றம் வரும் ஜனவரி 10-ம் தேதி விசாரிக்க உள்ளது. நீரவ் மோடி, அவரது சகோதரர் நீஷால் மோடி, சுபாஷ் பார்ப் மூவரும் வரும் ஜனவரி 15-க்குள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். தவறினால் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்படுவார்கள் என்றும் மும்பை நீதிமன்றம் எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
வைர வியாபாரியான நீரவ் மோடியும் அவருடைய உறவினர் மெகுல் சோக்ஸியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14,000 கோடி அளவில் நிதி மோசடி செய்துவிட்டு கடந்த ஆண்டு வெளிநாடுக்கு தப்பி சென்று விட்டனர். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் நீரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்டார். தற்போது லண்டன் நீதிமன்றக் காவலில் உள்ளார். மற்றொரு குற்றவாளியான மெகுல் சோக்ஸி ஆண்டிகுவா தீவில் தஞ்சம் அடைந்துள்ளார்.