அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழா மகாதீபம் ஏற்ற ஆவினில் இருந்து 3,500 கிலோ நெய் கொள்முதல்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய விழாவான மகா தீபம் வரும் 10ம் தேதி நடைபெறுகிறது. அன்று காலை பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். 10ம் தேதி ஏற்றப்படும் மகா தீபம் தொடர்ந்து 11 நாட்களுக்கு பக்தர்களுக்கு காட்சி தரும். தீபம் ஏற்ற 3,500 கிலோ நெய், ஆயிரம் மீட்டர் திரி பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், மகா தீபம் ஏற்றுவதற்காக 3,500 கிலோ தூய நெய், ஆவின் நிறுவனத்திடம் இருந்து கோயில் நிர்வாகம் கொள்முதல் செய்துள்ளது.

இந்த நெய் தலா 15 கிலோ எடை கொண்ட டின்களில் நேற்று அண்ணாமலையார் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது. மேலும், நெய் காணிக்கை செலுத்தும் பக்தர்களிடம் ஒரு கிலோ நெய் ₹250, அரை கிலோ நெய் ₹150, கால் கிலோ நெய் ₹80 என காணிக்கையாக கோயில் நிர்வாகம் பெறுகிறது. நெய் காணிக்கை செலுத்தும் பக்தர்களின் வசதிக்காக, அண்ணாமலையார் கோயில் 4ம் பிரகாரத்தில் உள்ள நிர்வாக அலுவலகத்தின் எதிரில், சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. ஏராளமான பக்தர்கள் ஆர்வமுடன் நெய் காணிக்கை செலுத்துகின்றனர். மேலும், ராஜகோபுரம் திட்டி வாசல் அருகே, நெய் குடம் காணிக்கை செலுத்த சிறப்பு பிரிவு 9ம் தேதி தொடங்கப்பட உள்ளது. மகா தீபம் ஏற்றுவதற்கான நெய் காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு, ஆருத்ரா தரிசனத்துக்கு பிறகு, தீப மை பிரசாதம் வழங்கப்படும்.

Related Stories: