ஆலந்தூர்: கிண்டியில் மனைவியை கொலை செய்துவிட்டு, அவர் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்தனர்.கிண்டி நேரு நகர் பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ் (25). கார் டிரைவர். இவரது மனைவி இலக்கியா (24). இவர் கிண்டியில் உள்ள தனியார் மால் ஒன்றில் செக்யூரிட்டியாக வேலை செய்து வந்தார். கடந்த 1ம் தேதி அதிகாலை ஜெயராஜ் அலறி கூச்சலிடும் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடிச் சென்று பார்த்தனர். அப்போது, இரவு தனக்கும், இலக்கியாவுக்கும் தகராறு ஏற்பட்டதாகவும், பின்னர் இருவரும் படுத்து தூங்கியதாகவும், காலையில் எழுந்து பார்த்தபோது இலக்கியா தூக்கில் தொங்கியது தெரிய வந்ததாகவும் ஜெயராஜ் கதறி அழுதார்.பின்னர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் இலக்கியாவை மீட்டு வேளச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அங்கு பரிசோதித்த டாக்டர்கள் இலக்கியா இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கிண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து இலக்கியாவிற்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளே ஆனதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிட்டனர். இதனிடையே, இலக்கியா உடலை பிரேத பரிசோதனை செய்தபின் அவரது சொந்த ஊரான திருவண்ணாமலைக்கு கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.