கோவை: கேரள வனப்பகுதியில் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் அரவிந்தின் உடல் கோவையில் நேற்று தகனம் செய்யப்பட்டது.கேரள மாநிலம் பாலக்காடு அருகேயுள்ள மஞ்சகண்டி வனப்பகுதியில் கடந்த மாதம் 28ம் தேதி கேரள மாநில நக்சல் தடுப்பு பிரிவான தண்டர்போல்ட் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மாவோயிஸ்ட்கள் மணிவாசகம்(50), புதுக்கோட்டை கார்த்திக் (35), நாகர்கோவில் ரமா (27), சென்னை நந்தனம் பகுதியை சேர்ந்த அரவிந்த் (எ) சீனிவாசன் (30) ஆகிய 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். தப்பியோடிய தீபக்கை தமிழக சிறப்பு காவல் படையினர் கைது செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் பலியான மாவோயிஸ்ட்களின் உடல் திருச்சூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் 4 பேரின் உடலையும் அடக்கம் செய்யலாம் என்று உத்தரவிட்டது. மேலும் துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று போலீசாரை அறிவுறுத்தியது.