மும்பை: பெரும்பான்மை இல்லாததால் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பதவி விலக வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் நவாப் மாலிக் கூறியுள்ளார். பட்னாவிஸ் பதவி விலகாவிட்டால் நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசை தோற்கடிப்போம் என அவர் கூறியுள்ளார். மகாராஷ்டிராவில் திடீரென பாஜகவின் பட்னாவிஸுக்கு முதல்வராக ஆளுநர் கோஷ்யாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். என்சிபி எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்ததாக கூறி பட்னாவிஸுக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் என்சிபியின் அஜித் பவாருக்கும் துணை முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ், என்சிபி, சிவசேனா கட்சிகள் வழக்கு தொடர்ந்தன. இவ்வழக்கை நேற்று ஞாயிற்றுக்கிழமை உச்சநீதிமன்றம் விசாரித்தது. அப்போது காங்கிரஸ்-சிவசேனா- என்சிபி சரத்பவார் பிரிவு தரப்பில் உடனே சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால் இதனை உச்சநீதிமன்றம் நீதிபதி ரமணா தலைமையிலான பெஞ்ச் ஏற்கவில்லை.