புதுச்சேரி: ஐ.ஐ.டி மாணவி பாத்திமா மரணத்திற்கு நீதி கேட்டு புதுவை மற்றும் செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி சட்டக்கல்லூரியில் சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிய பேருந்து நிலையம் எதிரே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் ஆணவ படுகொலையை தடுப்பதற்கு தனி சட்டம் இயக்க வேண்டும். மேலும் சென்னை ஐ.ஐ.டி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கில் காரணமான பேராசிரியரை கைது செய்யாமல் இருக்கும் தமிழக அரசை கண்டித்து மாணவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த இரண்டு சம்பவங்களும் தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது. எனவே இந்த சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் தமிழக மற்றும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அச்சமயம் தமிழக அரசு மற்றும் மத்திய அரசுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தினர்.