உலகின் மிக உயர்ந்த போர்க்களப் பகுதியான சியாச்சின் பகுதியை இந்திய சுற்றுலாவுக்காக திறக்க முடியாது: பாகிஸ்தான் அறிவிப்பு

இஸ்லாமாபாத்: உலகின் மிக உயர்ந்த போர்க்களப் பகுதியான சியாச்சின் ஒரு சர்ச்சைக்குரிய பிரதேசமாக விளங்குவதால் இந்தியா சுற்றுலா தொடங்குவதற்காக வழிதர முடியாது என்று பாகிஸ்தான் இன்று தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இமயமலையின் மீதுள்ளது சியாச்சின் பனிமலை பகுதி. ஆண்டு முழுவதும் பனிகட்டிகளால் நிறைந்து காணப்படும் இந்த பகுதி தான் இந்தியா பாகிஸ்தான் இடையே கார்கில் போருக்கு காரணம் ஆகும். சியாச்சின் தரைப்பகுதி முகாமில் இருந்து குமார் போஸ்ட் வரை சுற்றுலா நோக்கங்களுக்காக முழு பகுதியையும் திறக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளதாக கடந்த அக்டோபர் 21 ம் தேதி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். ஊடகங்களில் வெளியான இச்செய்திக்கு பதிலளிக்கும் விதமாக சியாச்சினில் இந்தியா சுற்றுலாப்பகுதியாக அறிவிப்பதை ஏற்க முடியாது என்று பாகிஸ்தான் தற்போது தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் முகமது பைசல் ஊடகத்தினரிடம் கூறியதாவது: சர்ச்சைக்குரிய பகுதியாக சியாச்சின் உள்ளது. ஆனால் இங்கு இந்தியா சுற்றுலாவைத் தொடங்கப்போவதாகக் கூறுகிறது. இந்தியா சியாச்சின் பகுதியை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்துள்ளது. சியாச்சின் பிரச்சினையில் இந்தியாவில் இருந்து நல்ல அல்லது சாதகமான எதுவும் நடக்கும் என்று பாகிஸ்தான் எதிர்பார்க்கவில்லை. அப்படியிருக்க, பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்குமான பிரச்சினையில் சிக்கியுள்ள சர்ச்சைக்குரிய பகுதியில் இந்தியாவுக்காக எப்படி சுற்றுலா செல்ல வழிவிடமுடியும். இவ்வாறு பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

Related Stories: