வாஷிங்டன்: அமெரிக்காவின் பாதுகாப்பு படைகளில் பணியாற்றிவரும் 14.5 லட்சம் பேருக்கு இன்ப அதிர்ச்சியாக இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.60 லட்சம் சிறப்பு ஊக்கத்தொகையை அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் பாதுகாப்பு படைகளில் பணியாற்றிவரும் சுமார் 14.5 லட்சம் பேருக்கு மிக பெரிய இன்ப அதிர்ச்சியாக தலா 1776 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.60 லட்சம் சிறப்பு ஊக்கத்தொகையியை அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்கா சுதந்திரம் பெற்று ஒரு தேசமாக உருவான ஒரு ஆண்டாக 1776ஐ நினைவு கூறும் வகையில் இந்த தொகை குறியீடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வாரியர் டிவிடெண்ட் என்று அழைக்கப்படும் இந்த திட்டம் தரைப்படை, கடற்படை, விமானப்படை, கடலோர காவல்படை மற்றும் விண்வெளி படை என அனைத்து ஆயுதப்படை பிரிவினருக்கும் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் தொடக்கத்தை கவுரவிக்கும் இந்த தொகைக்கு நமது வீரர்களைவிட தகுதியானவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது என்றும் அவர்களே தேசத்தின் உண்மையான ஈரோக்கள் என்றும் அதிபர் டிரம்ப் தனது தேசிய தொலைக்காட்சி உரையில் புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்த திட்டத்திற்கான நிதி ஆதாரமானது அமெரிக்காவின் பொது பட்ஜெட்டிலிருந்து எடுக்கப்படாமல் பிற நாடுகள் மற்றும் வெளிநாட்டு இறக்குமதி பொருட்கள் மீது விதிக்கப்பட்ட அதிரடி வர்த்தக வரி மூலம் திரட்டப்பட்ட வருவாயிலிருந்து வழங்கப்படுகிறது. வர்த்தக போர் மற்றும் புதிய இறக்குமதி கொள்கைகள் மூலம் அரசுக்கு எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான வரி வருவாய் கிடைத்துள்ளதாகவும் அந்த பலனை நேரடியாக வீரர்களுக்கு பகிர்ந்தளிப்பதாகவும் டிரம்ப் சுட்டிக்காட்டி உள்ளார். இதற்காக வித் பியூடிபுள் பீ என்ற புதிய சட்ட நடைமுறை பயன்படுத்தப்பட்டு நிதி ஏற்கனவே விடுவிக்கப்பட்டது.
வீரர்களுக்கான காசோலைகள் ஏற்கனவே அனுப்பப்பட்டு விட்டதாகவும் வரும் டிசம்பர் 25ம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாகவே இந்த தொகை அனைவரது கைகளுக்கும் கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பணவீக்கம் மற்றும் பொருளாதார சவால்கள் நிலவும் சுழலில் அதிபர் டிரம்ப்பின் இந்த அதிரடி அறிவிப்பு ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு மிக பெரிய கிறிஸ்துமஸ் பரிசாக அமையும் என்ற பெறும் வரவேற்பை பெற்றுள்ளது.
