ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய சண்டையில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொலை: 2 பேர் பிடிபட்டனர்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய சண்டையில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மேலும் இருவர் உயிருடன் பிடிபட்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் அமைப்பு சட்டத்தின் 370வது பிரிவை கடந்த ஆகஸ்டு 5ம் தேதி மத்திய அரசு ரத்து செய்து அறிவித்தது. இதன்பின்பு இந்தியா மீது பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதில் சில நேரங்களில் சாதாரண ஆயுதங்களை கொண்டும், சில நேரங்களில் பெரிய வகை ஆயுதங்களை கொண்டும் தாக்குதல் நடத்துகிறது.

இதற்கு இந்திய தரப்பில் கடுமையான பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே பந்திப்போரா மாவட்டத்தில் உள்ள லாதூரா என்ற இடத்தில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மறைந்திருந்த தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதனை தொடர்ந்து பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை மூண்டது. இதில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.

மேலும் இருவர் காயங்களுடன் பிடிபட்டுள்ளனர். இந்தத் தீவிரவாதிகள் அல் கொய்தா அமைப்பின் துணை அமைப்பான அன்ஸார் கஸ்வத் உல் ஹிந்த் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் என பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories: