மும்பை: மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைப்பதற்கான தனது விருப்பம் மற்றும் ஆற்றலை தெரிவிக்கும்படி பா.ஜனதாவை, மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி கேட்டுக் கொண்டுள்ளார். மகாராஷ்டிராவில் கடந்த அக்டோபர் 21ம் தேதி நடந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 288 உறுப்பினர் கொண்ட சட்டசபையில், கூட்டணி கட்சிகளான பா.ஜனதா 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன.இதேபோல மற்றொரு கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 44 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும் வெற்றி பெற்றன. இந்த தேர்தலில் பா.ஜனதா- சிவசேனா கூட்டணிக்கு பெரும்பான்ைம பலம் கிடைத்தபோதிலும் முதல்வர் பதவி குறித்த மோதல் காரணமாக, இந்த கூட்டணியால் ஆட்சி அமைக்க முடியவில்லை. முதல்வர் பதவியை சுழற்சி முறையில் தலா இரண்டரை ஆண்டுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற சிவசேனாவின் கோரிக்கையை ஏற்க பா.ஜனதா திட்டவட்டமாக மறுத்து விட்டது. இதனால் புதிய அரசு அமைப்பதில் இழுபறி ஏற்பட்டது. இந்த நிலையில் முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் கடந்த வெள்ளிக்கிழமை தமது பதவியை ராஜினமா செய்தார்.