புதுடெல்லி : மத்திய ஆயுதப்படை போலீசார் ஆண்டுக்கு 100 நாட்கள் குடும்பத்தினருடன் தங்கியிருக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற அமித்ஷாவின் உத்தரவை அமல்படுத்த உயர்குழு அமைக்கப்பட்டுள்ளது. மத்திய ஆயுதப்படை போலீஸ் பிரிவில் மத்திய ரிசர்வ் போலீஸ், எல்லை பாதுகாப்பு படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை, இந்தோ-திபெத் எல்லை போலீஸ், எஸ்எஸ்பி மற்றும் அசாம் ரைபிள்ஸ் உள்ளிட்ட பாதுகாப்பு படைகள் உள்ளன. இதில் மொத்தம் 7 லட்சம் வீரர்கள் உள்ளனர்.. பெரும்பாலும் இவர்கள் பணிநிமித்தம் காரணமாக சொந்த ஊர்களில் தங்க முடிவதில்லை. இப்படைப் பிரிவுகளில் உள்ள வீரர் ஒருவர் சராசரியாக ஆண்டுக்கு 75 நாட்கள் மட்டுமே குடும்பத்தினருடன் சேர்ந்திருக்க முடிகிறது. ஒருவர் 30 ஆண்டுகள் பணியாற்றினால் அவர் தனது பணிக்காலத்தில் 5 ஆண்டுகள் மட்டுமே குடும்பத்தினருடன் இருக்க முடியும். இதனால் வீரர்கள் கடும் மனஉளைச்சல் அடைகின்றனர்.