கோவை: கோவை, நீலகிரி மாவட்டத்தில் மாவோயிஸ்ட்கள் தடுப்பு நடவடிக்கை குறித்து டிஜிபி திரிபாதி கோவையில் நேற்று போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அருகேயுள்ள மஞ்சகண்டி வனப்பகுதியில் கேரள தண்டர்போல்ட் போலீசாருக்கும், மாவோயிஸ்ட்களுக்கும் நடந்த துப்பாக்கி சண்டையில் 4 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். குண்டு காயத்துடன் வனப்பகுதிக்குள் தப்பி சென்ற 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கேரள-தமிழக எல்லையான நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் மாவோயிஸ்ட் நடமாட்டம் குறித்தும், அயோத்தி வழக்கில் இன்னும் சில தினங்களில் தீர்ப்பு வருவதையொட்டி செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்வதற்காக காவல்துறை சட்டம்-ஒழுங்கு டிஜிபி திரிபாதி கோவை வந்தார்.